சிவாஜி

இந்தியத் திரைவானின் துருவ நட்சத்திரம்

-சித்ரா லட்சுமணன் 
1952 ஆம் ஆண்டில் தீபாவளி கொண்டாடிய தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் யாருக்கும் அப்போது தெரியாது -அந்த வருடத்து தீபாவளிக்கு மிகப் பெரிய சிறப்பை சேர்க்க ஒரு நடிகர் வரப் போகிறார் என்று.
அந்த தீபாவளியன்று எல்லா ரசிகர்களையும் தன்னுடைய அபரிமிதமான நடிப்பாற்றலால் திரும்பிப்பார்க்க வைத்த அந்த  நடிகரின் பெயர் சிவாஜி கணேசன்.

அவர் நடித்த முதல் திரைப்படமான பராசக்தி தீபாவளியன்றுதான் திரைக்கு வந்தது

ஒரு நடிகனைப் பொறுத்தவரை முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது  மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு சில கதாநாயகர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றாலும் அதில் எத்தனை பேர் முதல் படத்திலேயே தாங்கள் யார் என்பதை நிரூபித்திருக் கிறார்கள், எத்தனை பேர் முதல் படத்திலேயே வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் அப்படிப்பட்ட வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

முதல் படத்திலேயே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது மட்டுமின்றி மிகப் பெரிய வெற்றியைக் குவித்த மிகச்சில நடிகர்களில்  நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மிக முக்கியமானவர்.

சிவாஜி கவுரவ வேடத்தில் நடித்த  மர்மவீரன், தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை,குழந்தைகள் கண்ட குடியரசு, தாயே உனக்காக,சினிமா பைத்தியம் ,நட்சத்திரம், உருவங்கள் மாறலாம் ஆகிய ஏழு தமிழ்ப் படங்களையும் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் அவர் கவுரவ வேடத்தில் நடித்த பத்து படங்களையும் நீக்கி விட்டுப் பட்டியலிட்டால் சிவாஜி நடித்த படங்கள் மொத்தம் 288

அவர் நடித்த அந்த 288 படங்களில் 24 படங்கள் வெள்ளிவிழா படங்கள் 88 படங்கள் நூறு நாள் படங்கள்.
சதவிகிதப்படி பார்த்தால் அவர் நடித்த படங்களில் 39 சதவிகித படங்கள் நூறு நாள் படங்களாக அமைந்துள்ளன

முதல் படம் வெற்றிப்படமாக அமைந்த பல நாயகர்களுக்கு அவர்களின் நூறாவது படம் வெற்றிப்படமாக அமைந்ததில்லை 
ஜெமினி கணேசனின் நூறாவது படமான சீதா, ஜெய்சங்கர் நடித்த நூறாவது படமான இதயம் பேசுகிறது என்று பல கதாநாயகர்களின் படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம் 

ஆனால் சிவாஜியைப் பொறுத்தவரை அவரது நூறாவது படமான நவராத்திரி மட்டுமின்றி  125 வது படமான உயர்ந்தமனிதன் , 15௦0வது படமான சவாலே சமாளி, 175வது படமான அவன்தான் மனிதன் 200வது படமான திரிசூலம்  என  எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன 





சிவாஜி நடித்த படத்திலே உங்களுக்குப் பிடித்த படம் எது என்று தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் யாரிடம் கேட்டாலும் குறைந்த பட்சம் நூறு படங்களின் பெயர்களையாவது நிச்சயம் கூறுவார்கள். சமரசங்கள் நிறைந்த இந்த சினிமா உலகில் நல்ல படங்களில் மட்டும்தான் நான் நடிப்பேன் என்ற பிடிவாதத்தோடு எந்த நடிகனாலும் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல -அப்படி இருக்க விட மாட்டார்கள் என்பதும்  நாம் ஒப்புக் கொண்டாக வேண்டிய உண்மை
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே  இந்தத் திரையுலகில் சிவாஜி நடித்த படங்களின் பட்டியலைப் பார்க்கும்போது கண்ணாடிச் சில்லுகளால் ஆன கலைடாஸ்கோப் என்ற கருவியில் நாம் கண்ணைப் பதித்துப் பார்க்கும்போது அதன் காட்சிகள் மாறியபடி இருக்குமே அது போன்று எப்படிப்பட்ட படங்களை எல்லாம் தந்திருக்கிறார் இந்த மா மனிதர் என்ற வியப்பு நம்மையும் அறியாமல் தோன்றுவதை எந்த சினிமா ரசிகனாலும் அவ்வளவு சுலபத்தில்  தவிர்த்துவிட முடியாது
திரைப்படங்களில் அறிமுகமாகி பின்னர் நடிகனாக அடையாளம் காணப்பட்ட பல நடிகர்களை இந்த சினிமா உலகம் சந்தித்திருக்கிறது ஆனால் முதல் படத்திலேயே முழு நடிகனாக அறிமுகமான ஒரே நடிகர் சிவாஜி கணேசன்தான்.
1952 ஆம் ஆண்டில் அறிமுகமான  சிவாஜி அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஏழு திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த ஏழு படங்களில் கலைஞரின் கதை  வசனத்தில் உருவான  திரும்பிப்பார் திரைப்படமும் எல் வி பிரசாத் இயக்கத்திலே உருவான பெம்புடு கொடுக்கு என்ற தெலுங்குப் படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடின.
1954ஆம் ஆண்டில் வெளிவந்த மொத்த தமிழ்த் திரைப்படங்கள் 35.அதிலே எட்டு திரைப்படங்களில் சிவாஜிதான் நாயகன். அந்த எட்டு படங்களில் மனோகரா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, எதிர்பாராதது ஆகிய மூன்று திரைப்படங்களும் நூறுநாள் படங்கள். அதே ஆண்டில்  வெளிவந்த தூக்கு தூக்கி , அந்த நாள் ஆகிய இரு படங்களில் அந்த நாள் வெளியான போது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் அதற்குப் பிறகு மறு வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. தூக்குத் தூக்கி திரைப்படம் நூறு நாள் என்ற வெற்றிக் கோட்டைத் தொடவில்லை என்றாலும் அதுவும் வெற்றிப்படமே
அறிமுகமான நான்காவது ஆண்டில் சிவாஜி நடித்து வெளியான படங்களில் பத்மினியுடன் இணைந்து அவர் நடித்த மங்கையர் திலகம் படமும் அதற்கு அடுத்த ஆண்டில் அவர் நடித்து வெளியான ஒன்பது படங்களில் பெண்ணின் பெருமை அமரதீபம் ஆகிய இரு படங்களும் ஆகிய இரு படங்களும் நூறு நாள் படங்களாக அமைந்தன
அதற்குப் பிறகு வணங்காமுடி,உத்தம புத்திரன், பதிபக்தி ஆகிய படங்கள் மட்டுமின்றி  ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு நூறு நாள் படங்களிக் கொடுத்த சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் அவர் அறிமுகமான பராசக்தி படத்திற்குப் பிறகு இரண்டாவது வெள்ளிவிழா படமாக சம்பூர்ண ராமாயணம் அமைந்தது
வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை ஆகிய வெள்ளிவிழாப் படங்களிலும் சபாஷ் மீனா, மரகதம், ஆகிய நூறுநாள் படங்களிலும் 1959 ஆம் ஆண்டில் நடித்த சிவாஜி அதற்கு அடுத்த ஆண்டில் இரும்புத் திரை என்ற வெள்ளிவிழா படத்தையும்  தெய்வப்பிறவி, படிக்காத மேதை,விடிவெள்ளி என்று மூன்று நூறு நாள் படங்களையும் தந்தார்
சிவாஜியின் முதல் பத்து வருட திரை வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய வெற்றிகளை  சந்தித்த ஆண்டு என்றால் அது  196௦௦1ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டிலே அவர் நடித்த  பாவமன்னிப்பு பாசமலர் ஆகிய  இரு படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின என்றால் அவர் நடித்தா ஸ்ரீவள்ளி, மருத நாட்டு வீரன், பாலும் பழமும் ஆகிய படங்கள் நூறு நாள் படங்களாக அமைந்தன. மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையை வில்லை  என்றாலும் அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமான கப்பலோட்டிய தமிழன் படம் வந்ததும் அந்த ஆண்டில்தான்
எண்ணற்ற வெற்றிப்படங்களை சிவாஜிக்கு  கொடுத்த ஏ.பீம்சிங் இயக்கிய  பார்த்தால் பசி தீரும்,  படித்தால் பட்டும் போதுமா கே.சங்கர் இயக்கத்தில் உருவான ஆலய மணி ஆகிய மூன்று நூறு நாள் படங்கள் சிவாஜியின் நடிப்பிலே  196௦௦2 ஆம் ஆண்டில் வெளிவந்தன
அதைத் தொடர்ந்து எல் வி.பிரசாத் இயக்கத்திலே இருவர் உள்ளம், பி.மாதவன் இயக்கத்திலே அன்னை இல்லம்,பீம்சிங் இயக்கத்திலே பச்சை விளக்கு, பி ஆர்  பந்துலு இயக்கத்திலே கர்ணன், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்திலே கை கொடுத்த தெய்வம் தாதாமிராசி இயக்கத்திலே புதிய பறவை ஆகிய வெற்றி படங்களில் நடித்த சிவாஜியின் நூறாவது படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியைக்  குவித்தது ஏபி.நாகராஜன் இயக்கத்திலே வெளியான நவராத்திரி.
இப்போதுள்ளதுபோல கிராபிக்ஸ் வசதிகளோ அயல்நாட்டு ஒப்பனையாளரின் பக்க பலமோ  இல்லாமல் ஒன்பது வேடங்களிலும் மிகப்பெரிய மாறுதல்களைக் காட்டி படம் பார்த்த எல்லோரையும் சிவாஜி பிரம்மிக்க வைத்த படமாக அது அமைந்தது.
196௦௦0 களின் பிற்பகுதியில் சாந்தி, திருவிளையாடல்,மோட்டார் சுந்திரம் பிள்ளை, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட் செல்வர், இருமலர்கள்,ஊட்டிவரை உறவு,கலாட்டா கல்யாணம்,என் தம்பி, தில்லானா மோகனாம்பாள்,என்று ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்த சிவாஜியின் 125வது படமாக  உயர்ந்த மனிதன் வெளிந்தது.  எந்த ஸ்டுடியோவில் சக்சஸ் என்ற வார்த்தையைச் சொல்லி தனது சினிமா வாழ்க்கைக்கு சிவாஜி பிள்ளையார் சுழி போட்டாரோ அந்த ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாகவே  உயர்ந்த மனிதன் படம் அமைந்தது
எழுபதுகளில் சிவாஜி நடித்த படங்களில் வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி,சொர்க்கம், குலமா குணமா,சவாலே சமாளி, பாபு  ,ராஜா, ஞான ஒளி ,பட்டிக்காடா பட்டணமா,தர்மம் எங்கே,தவப்புதல்வன்,வசந்த மாளிகை, நீதி,பாரதவிலாஸ்,ராஜ ராஜ சோழன்,எங்கள் தங்க ராஜா, கவுரவம்,வாணி ராணி, தங்கப் பதக்கம்,என் மகன்,அவன்தான் மனிதன்,மன்னவன் வந்தானடி, கிரகப் பிரவேசம், சத்தியம், உத்தமன், தீபம்,அண்ணன் ஒரு கோவில், அந்தமான் காதலி,தியாகி, என்னைப்போல் ஒருவன்,ஜெனரல் சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத், திரிசூலம், நான் வாழ வைப்பேன், பட்டாக் கத்தி பைரவன் என்று  35 தமிழ்ப்படங்களும்,தர்த்தி என்ற இந்திப்படமும்,தச்சோளி அம்பு என்ற மலையாளப் படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடின .
இந்த எழுபதுகளில்தான் சிவாஜியின் 15௦0வது படமான சவாலே சமாளியும், 175௦ வது படமான அவன்தான் மனிதன் படமும், 200வது படமான திரிசூலமும் வெளி வந்து சிவாஜி ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தன.
ரிஷிமூலம்,சத்திய சுந்தரம், கல்தூண்,கீழ்வானம் சிவக்கும்,வா கண்ணா வா, தீர்ப்பு, நீதிபதி, சந்திப்பு, மிருதங்க சக்ரவர்த்தி, வெள்ளைரோஜா, திருப்பம்,வாழ்க்கை,தாவணிக் கனவுகள்,பந்தம்,முதல் மரியாதை, படிக்காதவன்,சாதனை, மருமகள்,ஜல்லிக்கட்டு, புதிய வானம்,    ஆகிய வெற்றிப் படங்களை 1980 களில் தந்த சிவாஜியின்  தேவர் மகன்,ஒன்ஸ் மோர் ஆகிய படங்கள் நூறு நாள் படங்களாகவும் படையப்பா படம் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தன
“இந்த நடிப்பு சிங்கத்தை நடிப்பிலே மிஞ்சியவரைக் காண்பது அரிது” என்று பாரதப் பிரதமர் நேரு அவர்களாலும், “தமிழன்னை தலையாய கலைஞனைக் கண்டு பெருமைப்படுகிறாள்”என்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களாலும்,”இவர் போன்ற கலைஞர்கள் தோன்றி இருப்பது இந்த நடு செய்த தவப் பயன்” என்று  இந்திரா காந்தி அவர்களாலும் “உலகின் தலை சிறந்த நடிகரான இவர் நம் நாட்டில் பிறந்தது நாம் பெற்ற பாக்கியம்”என்று தந்தை பெரியார் அவர்களாலும், “இந்த யுகத்தின் சிறந்த நடிகர் இவர்தான்”என்று அறிஞர் அண்ணா அவர்களாலும்,”நடிப்பின் இமயமலை”என்று கலைஞர் கருணாநிதி அவர்களிலும்,”நான் மனமார ஒப்புக் கொள்கிறேன்.என்னை விட சிறந்த நடிகர் அவர்’ என்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களாலும் பாராட்டப்பட்ட சிவாஜி இந்தியத் திரைவானில் ஒரு துருவ நட்சத்திரம் என்பதை யார் மறுக்க இயலும்? 

சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விழா


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பொறுத்தவரை வெற்றி என்பதை தனது முதல் படத்திலிருந்தே சுவைத்தவர் அவர். ஆகவே படங்களின் வெற்றியோ அல்லது அந்த படங்கள் பெற்றுத் தந்த பாரட்டுக்களோ அவரிடம் எப்போதுமே பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியதில்லை. அப்படிப்பட்டவரை இன்ப அதிர்ச்சியில் ஒரு விருது ஆழ்த்தியது என்றால் அது ஆப்ரிக்க  ஆசிய திரைப்பட விழாவிலே   வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்திலே நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த கதாநாயகன் விருதுதான்
எகிப்து  நாட்டிலே நடைபெற்ற அந்த பரிசளிப்பு விழாவில் சிவாஜிக்கான விருது அறிவிக்கப்பட்டவுடன் வீரபாண்டிய கட்ட பொம்மனை திரையில்  பார்த்துவிட்டு ஆறடி  உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு நாயகன் மேடைக்கு வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஐந்தடி உயரத்தில் இருந்த சிவாஜி மேடைக்கு வந்ததும் ஐந்து நிமிடத்திற்கு எழுந்து நின்று கை தட்டினார்களாம்
இந்தியாவிற்கு வெளியே சிவாஜி பெற்ற முதல் விருது அந்த விருதுதான்
“அவ்வளவு பெரிய பெருமை கிடைக்குமென்று நான் ஒரு போதும் நினைத்தது இல்லை. எவ்வளவு ஆர்ட்டிஸ்ட்களெல்லாம் இருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்ட் கிடைத்ததென்பது  ஆண்டவன் அருளல்லவா “ என்று அந்த விருதினைப் பற்றி தனது சுய சரிதையில் குறிப்ப்ட்டிருக்கிறார் சிவாஜி







Comments

Popular posts from this blog